உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் குழு, தங்களின் பொறுப்பில் உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாகச் சென்று மீட்புப் பணிகளில் தங்களின் ஒத்துழைப்பை அளிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் அதிகாரிகள் தலைமையில் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 24•7 செயல்பட முதல்வர் உத்தரவிட்டார்.
கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை, கால்நடைகள் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் உயிர் மற்றும் பண இழப்புகள் பதிவாகியுள்ளன. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.
கனமழை, மின்னல், பாம்புக்கடி மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தற்போது மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் உள்ள 1500க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.