புது தில்லி: உலக நாடுகளில் அதிகம் பரவி வரும் பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருப்பதால் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
புதிய வகை வைரஸ் நாட்டுக்குள் பரவிவிட்ட நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அதுபோல, நாடு முழுவதும் காய்ச்சல் போன்றவற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் கண்காணிக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வார இறுதியில், பண்டிகை நாள்கள் தொடங்கவிருப்பதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெகு சிலர் மட்டுமே முகக்கவசம் அணிவதாகவும், கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.