இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதை கண்டுகொள்ளாமல் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தேர்தல் தொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. ஆனால், மோடி தலைமையிலான அரசு பொருளாதாரம் குறித்து சிந்திப்பதில்லை எனவும், இனிதான் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி வரவிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் அன்சுல் அஜிவித் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: முகப்பரு முதல் சருமப் பொலிவு வரை... ஒரே தீர்வு 'கற்றாழை'!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்து அவர் கூறியதாவது: இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே மந்தமாக உள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பானது 10 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.4 ஆக இருந்தது என்றார்.
புதிதாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் ஆபத்தானது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவில்லை எனவும், டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இது மாதிரியான வெறும் அறிக்கைகள் மட்டும் எந்த ஒரு பயனும் அளிக்காது. மத்திய அரசு ரூபாயின் மதிப்பை வலிமைப்படுத்த ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.