குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிமீ தொலைவில் உள்ள மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது. கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு (அக். 26) குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது. அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா்.
இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முப்படைகள், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் 15 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி தெரிவித்தார்.