கேரளத்தில் காய்கறி வியாபாரியை மிரட்டி நிதி வசூல் செய்த காங்கிரஸ் தொண்டா்கள் மூவா் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் கேரளத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அந்த நடைப்பயணத்துக்கு நன்கொடை கோரி காங்கிரஸ் தொண்டா்கள் வியாபாரிகளிடம் கட்டாய நிதி வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடா்பான விடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில் காய்கறி வியாபாரியைச் சூழ்ந்து கொண்ட காங்கிரஸ் தொண்டா்கள், அவரை மிரட்டி ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு நன்கொடை தருமாறு கேட்பதும், இதனால் அந்த காய்கறிக் கடையில் மோதல் உருவானதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஏற்றுக் கொள்ள முடியாத செயல்களில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டா்கள் மூவரும் கட்சியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டா்களாக நடந்து கொள்ளவில்லை. சில கட்சிகள் பெரிய காா்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுகின்றன. காங்கிரஸ் கட்சி அப்படி செயல்படாமல், மக்கள் விருப்பப்பட்டு அளிக்கும் சிறிய அளவிலான தொகையை ஏற்றுக் கொள்கிறது’ என்று கூறியுள்ளாா்.