நாய் கூட சாப்பிடாது என்று தங்களுக்கு வழங்கப்படும் உணவைக் காட்டி கதறி அழுத காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்னிலையில் தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.
இதற்காக, அவர் பிரோஸாபாத்திலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காஸிபூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையும் படிக்க | வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி
பல முறை தரமற்ற உணவு குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும், வெந்ததும் வேகாததுமான தோசைக்கல் போன்ற சப்பாத்தியும், அதனை தொட்டுக் கொள்ள ஆறாக ஓடும் தண்ணீர் போல பருப்பும் கொடுப்பதாக அவர் கண்ணீர்விட்டுக் கதறி அழுதவரை, உடனடியாக கட்டடத்துக்குள் தூக்கிச் சென்ற காவலர்கள், அவரை நீண்ட நாள் விடுப்பில் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதன்பிறகு அவருக்கு தண்டனை மற்றும் பணியிட மாற்றங்கள் காத்திருந்தன.
உணவு குறித்து புகார் அளித்த போது அவர் கையில் வைத்திருந்த தட்டில் சில ரொட்டிகளும், கொஞ்சம் அரிசி சாதமும், பருப்பும் இருந்தது. அதனை கையில் வைத்தபடி, சாலையில் போராட்டம் நடத்திய காவலர், "ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு நாய் கூட இந்த ரொட்டிகளை சாப்பிடாது. எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது? என்று கேட்டு கதறி அழுதது பலரையும் கலங்க வைத்தது.
அதன்பிறகு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் கூறுகையில், எனது வீட்டில் இளைய சகோதரர்கள், சகோதரி உள்பட நாங்கள் ஆறு பேர். எனது பெற்றோர் வயதானவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள். சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் பணியாற்றிக் கொண்டு அவர்களை பராமரிப்பது மிகவும் சிரமமாகிவிட்டது. எனது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் நான்தான் என்கிறார் கண்ணீரை துடைத்தபடி.
அவரது நண்பர் இது பற்றி கூறுகையில், உணவு என்பது மிகவும் முக்கியம். அது பற்றி புகார் கூறியதற்காக என் நண்பனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அவன் தினக்கூலியாக இருந்து கொண்டே படித்து இந்த வேலையில் சேர்ந்தான் என்கிறார்.