இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு: கோடிக்கணக்கான மக்கள் பயனடைவர் -பிரதமர் மோடி
புதுதில்லி: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் முடிவு இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் தொடங்கி டிசம்பர் 2022 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நலத்திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து பயனாளிகளுக்கும் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா-வின் 6-ஆம் கட்டத்தில் இதுவரை அரசு சார்பில் சுமார் 3.45 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் ஏழாம் கட்டத்திற்கு சுமார் ரூ.44,762 கோடி நிதி கூடுதலாக செலவாகும். இதுவே பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா-வின் ஒட்டுமொத்தச் செலவு ரூ.3.91 லட்சம் கோடியாக இருக்கும்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை நீட்டிப்பதற்கான இன்றைய அமைச்சரவை முடிவு, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று பிரதமர் மோடி சுட்டுரை மூலம் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காலத்தில், இக்கட்டான நேரத்தில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜனா திட்டம் ஏழை, எளியோருக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கியுள்ளது என்றார்.