பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மி கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த பாஸ்கர், ஆம் ஆத்மியில் இணைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பாஸ்கர் பேசியதாவது:
“நான் 32 ஆண்டுகள் காவல்துறை அதிகாரியாகவும், ராணுவ வீரராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளேன். அனைத்துக் கட்சிகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், கேஜரிவால் மாதிரிதான் இந்தியாவுக்கு தேவை என்பதை நான் நம்புகிறேன்.
தில்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொஹல்லா மருத்துவமனைகளை பார்த்த நாளன்று ஆம் ஆத்மியில் இணைய முடிவெடுத்தேன்” என்றார்.
தில்லி, பஞ்சாப் மாநில அரசுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது தென் மாநிலங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.