காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியின் அலுவல்கள் இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் அன்புமணி பேசுகையில், “காவிரி நதியால் தமிழகத்தில் உள்ள 38-இல் 22 மாவட்டங்களில் பயனடைந்து வருகின்றன. 50 லட்சம் விவசாயிகள் இதை நம்பி உள்ளனர்.
30 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றமும், காவிரி ஆணையமும் அளித்துள்ள இறுதி தீர்ப்பில் காவிரி ஆற்றியில் தமிழகத்தின் அனுமதியின்றி எந்தவொரு கட்டுமானமும் ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசிடம் அனுமதி வாங்காமல் காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு என்ற அணையை கட்ட கர்நாடகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்” என்றார்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தின் பெயரைக் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.