காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோரை கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்து ஜூலை 25ஆம் தேதி அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியவுடன், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஓம் பிர்லா நிறைவேற்றினார்.
அப்போது அவைத் தலைவர் ஓம் பிர்லா பேசியதாவது:
அவைக்குள் பதாகைகளை கொண்டு வரக்கூடாது என அனைத்துக் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன். பதாகைகள் கொண்டு வந்தால், அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் சொல்வதை கேட்கமாட்டேன், உறுதியாக நடவடிக்கை எடுப்பேன். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக 6 திமுக எம்.பி.க்கள் உள்பட 23 பேர் கடந்த வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.