மகாராஷ்டிரத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் 18 எம்எல்ஏ.க்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் 18 எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பாஜக மற்றும் சிவசேனை தரப்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹா விகாஸ் அகாதி அரசு கவிழ்ந்ததை அடுத்து, முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் பதவியேற்ற 40 நாள்களுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது.
சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே, ராதா கிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் காவிட் மற்றும் அதுல் சேவ் ஆகியோர் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் ஆவார்.
தாதா பூசே, ஷம்புராஜே தேசாய், சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல் மற்றும் சஞ்சய் ரத்தோட் உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.