சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கும்பல் மாட்டை அடித்து ஆற்றில் வீசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பேர் கொண்ட இந்த கும்பல் மாட்டினை அடித்துக் கொடுமைப் படுத்துவது அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோ வைரலானதால் காவல் துறை உடனடியாக அந்த 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது, இரண்டு நாட்களுக்கு (ஆகஸ்ட் 10) முன்னர் விளைநிலங்களில் புகுந்து மாடு பயிர்களை நாசப்படுத்தியதால் அந்த 5 பேரும் இவ்வாறு செய்துள்ளது தெரிய வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த சம்பவம் நடந்து முடிந்தபோதிலும் விடியோ வைரலான பின்பே அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த விடியோவில் பதிவாகியிருப்பதாவது: “ பாலத்தின் மீது நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாட்டின் தலை ஒரு கோணிப் பையினால் மூடப்பட்டுள்ளது.அதனைச் சுற்றி பலர் குச்சிகளைக் கொண்டு தாக்குகின்றனர். பின்னர், அந்த மாட்டினை உயிருடன் வெள்ளம் போன்று செல்லும் ஆற்றில் பாலத்தின் மேலிருந்து தூக்கி வீசுகின்றனர்.” இவ்வாறாகப் பதிவாகியுள்ளது.
மாட்டின் உரிமையாளர் சிவ் குமார் சாகு என்பவர் ஆவார். அவர் சத்தீஸ்கரின் பேதிகோனா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மாட்டினைத் தாக்கியவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் விடியோவில் அடையாளம் காணப்பட்ட இருவர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 429ன் கீழ் கால்நடையைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: சசி தரூருக்கு பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருது
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகின்றது.