ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று(வெள்ளிக்கிழமை)100-வது நாளை எட்டியுள்ளது.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து ராஜஸ்தானில் நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று தனது 100 -வது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இன்று காலை உயர்நீதிமன்றம் முதல் கிரிராஜ் தரன் மந்திர் வரை ஆதரவாளர்களுடன் நடைபயணம் மேற்கொள்கிறார்.
ராகுலின் நடைப்பயணம் 100 நாளை எட்டியதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் நடைப்பயணம் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் கருத்தாக உள்ளது.
இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது.
இதையும் படிக்க | பழங்குடியினா் பட்டியலில் நரிக்குறவா்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்