
நாடாளுமன்றம்
இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 2-வது வாரமாக இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்றும் இந்திய ராணுவம் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன் போரில் உலகளாவிய பேரழிவை தடுத்தவர் மோடி: அமெரிக்க சிஐஏ பாராட்டு!
இதையடுத்து நாடாளுமன்றத்தில் எல்லையில் இந்திய - சீனப் படை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். எனினும் எல்லை மோதல் குறித்து மேலும் சில விளக்கங்களைப் பெறவும் விவாதம் நடத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதி கோரிய நிலையில் கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சீன எல்லைப் பிரச்னை குறித்து மேலும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து 2-வது வாரமாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, சையத் நசீர் உசேன் உள்ளிட்டோரும், மக்களவையில் மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...