கொச்சி: கேரள மாநிலம் திரிசூர் பகுதியில், நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு வந்தவர்களின் கார் ஆற்றில் விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
திங்கள்கிழமையன்று திரிசூரில் நடைபெற்ற நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு ஆறு பேர் ஒரு காரில் வந்துள்ளனர். இந்த கார் திரிசூர் அருகே அரட்டுப்புழாவில் ஓடும் கருவன்னூர் ஆற்றங்கரையோரம் வந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் சென்றது. இதில் எதிர்பாராதவிதமாக கார் ஆற்றில் விழுந்தது.
கார் ஆற்றில் விழுவதைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். கயிரைக் கட்டி காரை மேலே இழுத்தனர். எனினும், காரில் இருந்த ராஜேந்திர பாபு (66), அவரது மனைவி மற்றும் பேரன் என மூன்று பேரும் காருக்குள்ளேயே பலியாகினர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.