
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்று குடியரசு நாளில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி சோனியா காந்தி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு, மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ், அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைசி போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 37 தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
படிக்க | தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
அதில், அனைவரும் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.
சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான்.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்.
படிக்க | அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கோரிய மனு தள்ளுபடி
சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் பிரிவினையை எதிர்த்துப் போரிட முடியும்.
சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் பின்தங்கியவர்களுக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும்.
இந்த குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன.
படிக்க | ஆதாரை இணைக்க வேண்டும்!: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்
ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர் / நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.