உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் தலைநகர் கீவ்வைக் கைப்பற்ற ரஷியா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேசினார். புதினிடம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடி, உக்ரைனிலுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது குறித்தும் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்
இதைத் தொடர்ந்து, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அருகிலுள்ள நாடுகள் மூலம் மீட்க இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் மீண்டும் கூடவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் நிதித் துறை அமைச்சர்களுக்கு அப்பாற்பட்டு பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.