பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை விட அவரது மகன் நிஷாந்த், ஐந்து மடங்கு அதிகமான சொத்துக்களை வைத்துள்ளார். அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என மொத்தம் 75.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் நிதிஷ் குமாருக்கு சொந்தமாக உள்ளது.
முதல்வர், அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் பிகார் அரசின் இணையதளத்தில் டிசம்பர் 31ஆம் தேதி பதிவேற்றப்பட்டது. நிதிஷ் குமாரிடம் ரொக்கமாக 29,385 ரூபாயும் வங்கி கணக்கில் 42,763 ரூபாயும் உள்ளது. அதேபோல், அவரது மகனிடம் ரொக்கமாக 16,549 ரூபாயும் நிலையான வைப்பு கணக்கில் 1.28 கோடி ரூபாய் உள்ளது.
நிதிஷ் குமாருக்கு சொந்தமான அசையும் சொத்துக்களின் மதிப்பு 16.51 லட்சம் ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, அசையா சொத்துக்களின் மதிப்பு 58.85 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அவரது மகனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.63 கோடி ரூபாயாக உள்ளது. அசையா சொத்துக்களின் மதிப்பு 1.98 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிதிஷ் குமாருக்கு சொந்தமாக புது தில்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. அதேபோல், பாட்னாவில் உள்ள கல்யாண் பிகா, ஹகிகத்பூர், கன்கர்பாக் ஆகிய இடங்களில் அவரது மகனுக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் குடியிருப்பு வீடுகளும் உள்ளன. 1.45 லட்சம் மதிப்பிலான 13 பசுக்களும், ஒன்பது கன்றுகளும் தன்னிடம் இருப்பதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளிலும் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை கட்டாயமாக பொதுவெளியில் வெளியிட வேண்டும் என நிதிஷ் குமார் அரசு உத்தரவிட்டிருந்தது. துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோரும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முதல்வரை விட அவரது அமைச்சரவை சகாக்கள் அதிக சொத்துகளை வைத்துள்ளனர்.