பாதுகாப்பு குறைபட்டதால் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா பரவும் சூழ்நிலையிலும் இந்த மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவிருந்தார். இதையடுத்து ஒரு சில காரணங்களால் பிரதமரின் பெரோஸ்பூர் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மேடையிலேயே அறிவித்தார்.
பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், 'பிரதமர் மோடி செல்லும் வழியில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேம்பாலத்தில் பிரதமரின் கான்வாய் வாகனங்கள் 15-20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணமும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, பாதுகாப்பு கருதி பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை அறிந்து விவசாயிகள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை அழைத்தபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.