குஜராத் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
குஜராத் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், காந்திநகர், ஜாம்நகர், ஆனந்த், ஜூனாகத், நதியாட், பாவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுவெளியில் நடைபெறும் அரசியல், திருமணம் மற்றும் இதர பொது நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 400 பேர் வரை மட்டும் கலந்துகொள்ளவும், உள்அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அழகு நிலையங்கள், கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் 75 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை இயங்கவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 75 சதவிகித பயணிகளுடன் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், நீச்சல் குளங்கள், நூலகங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.