கோவா பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மைக்கேல் லோபோ தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மைக்கேல் லோபோ பேசியதாவது,
நான் கோவா அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். கலங்குட் தொகுதி மக்கள் எனது முடிவை மதிப்பார்கள் என்று நம்புகிறேன். எனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்கிறேன். பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதைக் கண்டு நான் வருத்தப்படுகிறேன் என்றார்.
இதற்கிடையே இன்று மாலை காங்கிரஸ் கட்சியில் லோபோ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. இதில், கோவா தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 14ஆம் தேதியும் வாக்கெண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.