கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு அதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 15 முதல் 18 வயதுடைய அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திமுடித்திருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த ஒரு நாளில் மட்டும் 6,238 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,390 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 34,902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.