தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை கேரள பகுதிகளுக்கு இயக்கப்படும் அம்மாநில அரசுப் பேருந்துகள் பயணிகளின்றி களியக்காவிளை பேருந்து நிலையம் வரை வந்து திரும்பிச் சென்றன.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக களியக்காவிளை, மாா்த்தாண்டம், நித்திரவிளை, கொல்லங்கோடு பகுதிகளில் கடைகள், காய்கனி மற்றும் மீன் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. அண்டை மாநிலமான கேரளத்தில் கடைகள் வழக்கம் போல திறந்திருந்த நிலையில் அம் மாநில அரசுப் பேருந்துகள் பயணிகளை கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளையில் இறக்கி விட்ட பின் களியக்காவிளை பேருந்து நிலையம் வந்து திரும்பிச் சென்றன.
மாநில எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனை மேற்கொண்டதுடன் கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவா்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனா்.