ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கரோனா என்றால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுக்க கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்படுவதாகவும், தொற்று கண்டறியப்பட்டால் அடுத்த 7 நாள்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்தவகையில் கர்நாடகத்தில் பெங்களூரு மாநகராட்சியில் அதிக அளவிலானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளது.
அதன்படி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த குடியிருப்பு பகுதி முழுக்க சீல் வைக்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொற்று உறுதிசெய்யப்பட்டால், அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமே கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டுவரப்படும். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.