பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்கள் வானில் நேருக்கு நேர் மோதவிருந்தது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரக (டிஜிசிஏ) மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
"இரண்டு இண்டிகோ விமானங்கள் 6E455 (பெங்களூரு - கொல்கத்தா) மற்றும் 6E246 (பெங்களூரு - புவனேஷ்வர்) பெங்களூரு விமான நிலையத்தில் 'பிரீச் ஆஃப் செபரேஷன்'-இல் ஈடுபட்டன.
இதையும் படிக்க | சர்வதேச விமான சேவைக்கான தடை பிப். 28 வரை நீட்டிப்பு: மத்திய அரசு
இரண்டு விமானங்கள் வான்வெளியில் குறைந்தபட்ச கட்டாய செங்குத்தான தூரம் அல்லது கிடைமட்ட தூரத்தைக் கடக்கும்போது 'பிரீச் ஆஃப் செபரேஷன் நிகழும். ஜனவரி 9-ம் தேதி காலை இரண்டு விமானங்களும் ஏறத்தாழ 5 நிமிட இடைவெளியில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளன. புறப்பட்டவுடன் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் சென்றன.
ரேடார் கன்ட்ரோலர் மூலம் இரண்டு விமானங்களும் வானில் நேருக்கு நேர் மோதவிருந்தது தவிர்க்கப்பட்டது" என்றனர்.
இந்த சம்பவம் எங்கும் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகவில்லை என்றும் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியாவும் இதை வெளியிடவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கேட்டதற்கு இண்டிகோ மற்றும் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
டிஜிசிஏ தலைவர் அருண் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.