பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிவுகளை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.
இதில், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி ஆரம்பித்த பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியானது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ.பி.நட்டா கூறியதாவது:
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 65 தொகுதிகள், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகள், சிரோமணி அகாலி தளம்(சன்யுக்த்) 15 தொகுதிகளிலும் இணைந்து போட்டியிடவுள்ளன.
பஞ்சாப் மீது சிறப்பு கவனம் தேவை. பஞ்சாபில் பாதுகாப்பு என்பது மிகவும் மோசமான பிரச்னையாக இருப்பதாக தெரிவித்தார்.