
உத்தரகண்ட் தொப்பி, மணிப்பூர் துண்டு அணிந்து வந்த பிரதமர் மோடி
விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் உத்தரகண்ட் மாநில பாரம்பரிய தொப்பியுடன், மணிப்பூர் மாநில துண்டை அணிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 73வது குடியரசு நாள் விழாவில் பங்கேற்றார்.
வழக்கமாக, குடியரசு நாள் விழாவில் பங்கேற்கும் போது மிக அழகிய தலைப்பாகையை பிரதமர் மோடி அணிவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்து வந்தார்.
குடியரசு நாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். அதில், அந்த மாநிலத்தின் மாநில மலரான பிரம்மக்கமலம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதோடு, மணிப்பூர் மாநில பாரம்பரிய துண்டினையும் பிரதமர் மோடி அணிந்திருந்தது பலரது கவனத்தையும் பெற்றது.
இன்னும் ஒரு சில வாரங்களில் உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இவை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...