புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக ட்விட்டரில் தன்னை பின் தொடர்பவர்களை ட்விட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலுக்கு 27 டிசம்பர் 2021 அன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் எண்ணத்தை அழிக்க ட்விட்டரை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் சார்பாக நான் உங்களுக்கு எழுதுகிறேன்.”
ட்விட்டரில் என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரமாகவும், மாதத்திற்கு 2 லட்சமாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2021 ஆகஸ்ட் முதல் வெறும் 2,500 என்ற எண்ணிக்கையில் மாறி இருக்கிறது. என்னிடைய ட்விட்டரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி திடீரென குறைந்துள்ளது குழப்பமாக உள்ளது. ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாக அப்படியே மாறாமல் நிற்கிறது. தற்போது தினசரி கணக்கை எடுத்தால் பூஜ்யம் என்ற நிலையை காட்டுகிறது. இதை தற்செயல் என விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தில்லியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்த நாளில் இருந்து தான் இந்த பிரச்னை தொடங்கியது. மூன்று வேளாண்திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விசாயிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினேன். இது குறித்து நான் பதிவிட்ட விடியோ பதிவு, சமீப காலங்களில் இந்தியாவில் அரசியல் தலைவர்களால் அதிகம் பார்க்கப்பட்ட விடியோவில் அதுவும் ஒன்று. அதுவும் நீக்கப்பட்டது.
ட்விட்டர் நிறுவனத்தில் இந்தியாவில் வேலை செய்யும் என் நண்பர்கள் எனது குரலை அடக்குவதற்கு மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னை பின் தொடர்பவர்களை டுவிட்டர் நிர்வாகம் கட்டுப்படுத்தி வருவதாக கூறுகின்றனர். எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் எனது கணக்கு சில நாள்கள் முடக்கப்பட்டிருந்தது. இது குறித்து நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.