செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, கணவரை தூக்கிச் சுமந்தபடி கிராமம் முழுக்க பெண்ணை நடக்கவிட்டு துன்புறுத்திய கிராமத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து கிராமத்துக்குச் சென்ற காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த விடியோவில் பெண்ணின் கணவர், கிராம மக்கள் முன்னிலையில் மனைவியை அடித்து உதைத்தபடி செல்கிறார். பிறகு, அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்படுகிறது. அப்பெண்ணை, கணவரை தூக்கிச் செல்லும்படி கிராம மக்கள் எச்சரிக்கிறார்கள். பிறகு அவர் கணவரை தூக்கிக் கொண்டு நடக்கிறார். இதற்கு கிராமத்தினர் நான்கு பேர் உதவி செய்வதும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கூறுகையில், அண்மையில் இப்பெண் காணாமல் போனதாக கணவர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். உறவினர்களிடம் கேட்டு விசாரித்ததில், ஒரு ஆணுடன் அவர் தங்கியிருந்ததை கணவர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, அப்பெண்ணை கிராமத்தினர் துன்புறுத்தியிருப்பது தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.