புது தில்லி: மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்ற 57 உறுப்பினர்களில் 27 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 57 பேரில் 14 பேர் மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று புதிதாக தேர்வான 27 பேரும், அவைத் தலைவர் வெங்கைய நாயுடு முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிக்க | சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
இன்று பதவியேற்றுக் கொண்ட 27 எம்.பி.க்களில் 18 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பேரும் பல்வேறு மொழிகளில் பதவியேற்றுக் கொண்டனர். 12 பேர் ஹிந்தியிலும், 4 பேர் ஆங்கிலத்திலும், சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி, ஒரியா மொழிகளில் தலா இருவரும், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் தலா ஒருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 57 பேரில், முன்னதாக நான்கு பேர் ஏற்கனவே பதவியேற்றுக் கொண்டனர். இன்று பதவியேற்றுக் கொள்ளாத மற்றவர்கள், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளில் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலிருந்து வரும் ஜூலை மாத இறுதியில் 72 உறுப்பினர்கள் ஓய்வு பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.