நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு அவைத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூலை 17ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 16 மாலை 4 மணிக்கு அனைத்து மக்களவை கட்சிகளின் தலைவர்களை ஆலோசனைக் கூட்டத்திற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைத்துள்ளார்.
அதேபோல், அனைத்து மாநிலங்களவை கட்சித் தலைவர்களையும் ஜூலை 17ஆம் தேதி கூட்டத்திற்கு துணை குடியரசுத் தலைவரும், அவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவா் தோ்தலும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தேர்தலும் நடைபெறவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே பதவி ஏற்கவுள்ளதால், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.