பங்குச் சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா சிபிஐயால் கைது செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, 2009 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டதாக, பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கடந்த மே 24 ஆம் தேதி திகார் சிறைக்கே சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளது. மேலும் அவருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிகிறது.