விலை உயர்வுக்கு எதிராக விவாதிக்க அனுமதிக்காததை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: எதிர்க்கட்சிகள் அமளி: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தொடர்ந்து ஐந்தாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியைத் தொடர்ந்து 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பினர்கள் பணவீக்க உயர்வுக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியவாறும், தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.