உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தலைவரான யாசின் மாலிக்கை பயங்கரவாதத்துக்கு நிதி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்க | திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு!
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதுவின் மகள் ரூபியா சயீது 1989-இல் கடத்தப்பட்ட வழக்கில் ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். எனினும் அதற்கு மத்திய அரசிடமிருந்து உரிய பதில் வராத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
தொடர்ந்து 5 நாள்களாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வருகிறது. ஏற்கெனவே அவர் சிறை மருத்துவப் பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் புதிய கண்டுபிடிப்பு
தில்லியில் உள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.