திருடனுக்குள் ஒரு ஸ்பைடர்மேன்: வைரலாகும் விடியோ
பிகாரில் ஓடும் ரயிலில் பயணிகளிமிருந்து செல்லிடப்பேசி, பணம் முதலியவற்றை ஸ்பைடர்மேன் பாணியில் திருடும் திருடனின் விடியோ வைரலாகி வருகிறது.
ஸ்பைடர்மேன் பாணியில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் திருடும் இந்த திருடனின் விடியோ இணையத்தில் பலமுறை பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது.
வைராலாகி வரும் அந்த விடியோவில் இருப்பதாவது, “ ரயில் படிக்கட்டில் இருவர் அமர்ந்து வெளிப்புறம் வேடிக்கை பார்த்தவாறு பயணம் செய்து வருகின்றனர். ரயில், பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கிறது. திடீரென படியில் அமர்ந்து இருந்த இரண்டு பேரில் ஒருவர் குழப்பமாக பார்க்கிறார். பின்னர், அந்த விடியோவினை மெதுவாக பார்க்கும்போது பாலத்தில் இருந்து ஒருவர் அந்த பயணியிடம் இருந்த செல்லிடப்பேசியை கண் இமைக்கும் நேரத்தில் பிடுங்கி விடுகிறார். தனது செல்லிடப் பேசி பறிபோனதை சற்று தாமதமாகவே அந்த பயணி உணர்கிறார். இவ்வாறாக அந்த விடியோ முடிவு பெறுகிறது.
”
இந்த விடியோவானது பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக இணையத்தில் வலம் வந்தது. பலரும் இந்த விடியோவில் இருக்கும் திருடனை ஸ்பைடர்மேன் என ஆச்சர்யமாகக் கூறி வருகின்றனர். சிலர் ரயில் பயணங்களில் இது போன்ற பாலத்தின் மீது செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.