இந்த கடினமான காலத்தில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு பங்களிக்க உள்ளதால் குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா குடியரசுத் தலைவர் தேர்தலில் இருந்து தனது பெயரை திரும்பப் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனது பெயரை பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தனது நன்றியினை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எனது பெயரினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது எனக்கு மிகப் பெரிய கௌரவம். மம்தா பானர்ஜி என்னைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பின்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். இந்த கௌரவம் எனக்கு வழங்கப்படுவது குறித்து என் குடும்பத்தினரிடமும், சக நண்பர்களிடமும் ஆலோசித்தேன். நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு எனது பெயரை பரிந்துரைத்தது பெருமையாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் இக்கட்டான சூழலில் இருப்பதாக நான் கருதுகிறேன். அதன் வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்” என்றார்.