ஹிமாச்சல் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப் கார் தொழில்நுட்பக் காரணத்தால் அந்தரத்தில் நின்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்வானு அருகே இன்று பிற்பகலில் 4 பெண்கள், 2 முதியோர்கள் உள்பட 11 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப்கார் தொழில்நுட்பக் காரணத்தால் நடுவானில் நின்றது. மேலும், கீழ் மலைப் பகுதியில் 5 பயணிகளுடன் சென்ற ரோப் காரும் நின்றது.
இந்நிலையில், சுமார் 2 மணிநேரமாக அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் ரோப்காரில் இருந்து இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புப் பணிகளை பார்வையிட ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு ரோப் கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அடுத்த சம்பவம் நடந்திருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.