அக்னிபத் திட்டம் மூலம் நாட்டின் ராணுவ பலத்தை பலவீனமாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் அமலாக்கத் துறையினர் நேற்று 5வது நாளாக ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை நடைபெற்ற 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு வருகை புரிந்தார்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், அமலாக்கத் துறை மூலம் நடத்தப்படும் தொடர் விசாரணை என்னை பாதிக்காது. காங்கிரஸ் தலைவர்களை அச்சம் கொள்ளவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது செய்ய முடியாது என்பது என்னிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கும் தெரியும்.
அக்னிபத் திட்டம் மூலம் இளைஞர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் வேறுவகையில் அரசு வேலைவாய்ப்பைப் பெறப்போவதில்லை. அவர்கள் (பாஜக) நாட்டின் ராணுவ பலத்தை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வேண்டும். உண்மையான நாட்டுப்பற்று என்பது நாட்டை பலப்படுத்துவதுதான் என்பதை இளம் இந்தியா அறியும். ஆனால் இந்த திட்டம் அதனைச் செய்யாது எனக் குறிப்பிட்டார்.