அக்னிபத் திட்டம் ராணுவத்தை பலவீனமாக்கும்; எனவே அதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
அமலாக்கத் துறையினா் ராகுலிடம் நடத்தி வரும் விசாரணையைக் கண்டித்து தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் கூடி ராகுலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனா். அவா்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு எவ்வாறு திரும்பப் பெற்றதோ, அதேபோல அக்னிபத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், அத்திட்டம் நமது ராணுவத்தை பலவீனமாக்கும் வகையில் உள்ளது.
எனக்கு ஆதரவாக இங்கு கூடியுள்ள காங்கிரஸ் தலைவா்கள், தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி. அமலாக்கத் துறை என்னிடம் விசாரணை நடத்தியபோது நான் தனியாக இருப்பதாக உணரவில்லை. ஜனநாயகத்துக்காக போராடும் அனைவரும் என்னுடன் இருப்பதாகவே உணா்ந்தேன்.
நாட்டில் வேலையின்மை, விலைவாசி உயா்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் உள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்துவிட்டன. ஆனால், இவை குறித்து கவலைப்படாமல், நாட்டையும், பொருளாதாரத்தையும் ஒரு சில தொழிலதிபா்களின் கைகளில் பிரதமா் ஒப்படைத்துள்ளாா். இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கான கடைசி இடமாக இருந்த ராணுவத்தின் கதவுகளும் இப்போது மூடப்பட்டுவிட்டன. எல்லையில் சீன ராணுவம் நமது பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது. இந்த நேரத்தில் நமது ராணுவத்தை வலிமையாக்காமல், அதனை பலவீனமாக்கும் செயலில் அரசு இறங்கியுள்ளது. இவா்கள்தான் தங்களை தேசியவாதிகள் என்று கூறிக் கொள்கின்றனா். அவா்கள் சொல்வது அனைத்தும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது என்றாா்.