குஜராத் ரயில் எரிப்புச் சம்பவம் மற்றும் வன்முறை தொடர்பான வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
குஜராத் கலவரத்தின்போது ஆமதாபாதில் உள்ள குல்பர்க் ஹவுசிங் சொசைட்டி எனுமிடத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்தது.
குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி, கடந்த 2014-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், கடந்த 2018ல் ஸகியா ஜாப்ரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.