தில்லி பயணம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியினப் பிரிவை சேர்ந்த திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியில் உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியானது தனது ஆதரவை இதுவரை அறிவிக்காமல் உள்ளது.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் கணக்கு
இதற்கு முக்கிய காரணம், பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்மு பழங்குடியினப் பிரிவை சேர்ந்தவர் என்பதுதான்.
இதற்கிடையே, இன்று பயணம் மேற்கொண்டுள்ள ஹேமந்த் சோரன், காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.