கேரளத்தில் சாலையோரம் பலூன் விற்பனை செய்துவந்த சிறுமி விளம்பர மாடலாக மாறியுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பலூன் விற்பனை செய்துவந்த சிறுமியை எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் விளம்பர மாடலாக மாறியுள்ளார். இதனால் புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கேரள மாநிலம் தலசேரி அடுத்த அண்டலூர் பகுதியில் உள்ள கோயிலில் கிஷ்பு என்ற சிறுமி பலூன் விற்பனை செய்து வந்துள்ளார்.
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கிஷ்பு, இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்ததால், கேரளத்தில் பலூன் விற்பனை செய்து தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கேரளத்தைச் சேர்ந்த அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்படக் கலைஞர், கோயில் திருவிழாவில் சிறுமி கிஷ்பு, பலூன் விற்பனை செய்துகொண்டிருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார்.
இளம் பருவத்தினரை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட புகைப்படக் கலைஞர், கிஷ்புவை ஆடை, அணிகலன்கள் அணியச் செய்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடரந்து, விளம்பர மாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வர ஆரமித்துள்ளன. இதனால் இணையத்தில் அவரது புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு, கேரளத்தைச் சேர்ந்த 60 வயது கூலித் தொழிலாளியின் புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரும், விளம்பர மாடலாக மாறினார்.
இதேபோன்று தெருவோரம் பாட்டுப் பாடி பாதாம் விற்றுக்கொண்டிருந்த பூபன் பத்யாக்கர் சினிமாவில் பாடகராகவும் இணையத்தில் அவர் வைரலானதே காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.