குஜராத் மாநிலத்தில் நிலவி வரும் வெப்ப அலைகளின் தாக்கத்தால் பறவைகள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவைக் காட்டிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரலில் அதிக வெப்பம் நிலவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வடகொரியாவில் கரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் அதிபர் கிம்
குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற வடமேற்கு, மத்திய மாநிலங்களில் மே மாதத்திலும் இயல்புநிலையைக் கடந்து கூடுதல் வெப்பநிலையை உணரப்பட்டு வருகிறது.
இந்த கடுமையான வெப்பம் காரணமாக மனிதர்களைப் போன்றே விலங்கினங்களும், பறவைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் நிலவும் வெயில் காரணமாக பறவைகள் மயங்கி விழுவது அதிகரித்து வருவதாக கால்நடை மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கைக்கு புதிய பிரதமர்: அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு
கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளுக்கு வெப்ப அலை பாதிப்பிற்கு சிகிச்சை அளித்ததாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள் அவற்றில் புறாக்கள் மற்றும் கிளிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றுக்கு மத்தியில் குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் வெப்ப அலை தொடர்பான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க தனி சிகிச்சைபிரிவுகளை ஏற்படுத்துமாறு மாநில சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.