இலங்கைக்கு புதிய பிரதமர்: அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவிப்பு
இலங்கைக்கு புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை இந்த வாரத்தில் நியமிக்கப்பட உள்ளதாகவும் மக்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சிக்கல் காரணமாக உணவு உள்ளிட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதையும் படிக்க | காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுங்கள்: இலங்கை காவல் துறை
மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் இலங்கையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இலங்கைக்கு இந்த வாரத்தில் புதிய பிரதமரும், அமைச்சரவையும் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அமைதிக்குத் திரும்ப வேண்டும் எனவும், நாடு திடமான நிலையை எட்டியவுடன் அதிபருக்கான அதிகாரங்கள் குறைத்துக் கொள்ளப்படும் எனவும் மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.