புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. ப. சிதம்பரத்தின் சென்னை, தில்லி வீடுகளிலும் சிபிஐ சோதனை நடந்து வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு வழக்குகளையும், சோதனைகளையும் சந்தித்தவர்தான். அவரது வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடந்து வரும் நிலையில், சோதனை நடைபெறும் அந்த தருணம் சுவாரஸ்யமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு
இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி வரும் நிலையில், சிதம்பரம் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது,
இன்று காலை, சிபிஐ அதிகாரிகள் குழு, தில்லி மற்றும் சென்னையில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடத்திவருகிறார்கள். சிபிஐ அதிகாரிகள் காண்பித்த முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இல்லை. நடைபெற்று வரும் சிபிஐ சோதனையில் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை, எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
சோதனை நடக்கும் தருணம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. ‘ஆறாவது முறையாக சோதனை’: கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட சென்னை, மும்பை, தில்லி நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.