கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புதிதாகத் திருமணமான மகன் மற்றும் மருமகளைக் கொடூரமாகக் கொலை செய்த 70 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராம் பாக் பகுதியில் நேரிட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம், சில மாதங்களுக்கு முன்புதான் கொலையுண்டவர்களின் திருமண வைபவர் ஒரு திருவிழா போல மிகப்பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அதைப் பற்றி ஊர் மக்கள் பேசித் தீர்ப்பதற்குள், அந்த குடும்பத்தில் இப்படி ஒரு துயரம் நடந்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, ராம் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக திருமணமான தம்பதி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. கொலை செய்யப்பட்ட சிவம் திவாரி (27), மனைவி ஜூலை (25) ஆகியோர் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிக்க.. உதகை மலர்க்காட்சியில் என்ன ஸ்பெஷல்?
சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சிவம் திவாரியின் தந்தை தீப் குமார் திவாரியை (70) கைது செய்தனர். இரட்டைக் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். சுவரூப் நகரில் உள்ள மருத்துவமனை வாயிலில் தேநீர் கடை நடத்தி வரும் தீப் குமாரின் மூத்த மகன் மோனு திவாரி, மனநிலை பாதிக்கப்பட்டனர். இளைய மகன் சிவம் உணவகம் நடத்தி வருகிறார்.
காவல்துறை விசாரணையில், மகனின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றதாகவும், அப்போது கூச்சல் போட்ட மருமகளின் கழுத்தையும் அதே கத்தியால் அறுத்ததாகவும் கூறியுள்ளார். வீட்டின் பொருளாதார நிலை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக, அனைவரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார் தீப் குமார்.