அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிவசேனை மூத்த தலைவர் சுதிர் சூரி பலியானார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் கோயில் ஒன்றில் சாமி சிலையை குப்பையில் வீசியதற்கு எதிராக சிவசேனை கட்சி சார்பில் போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்த சிவசேனை மூத்த தலைவர் சுதிர் சூரி மீது குடியிருப்புப் பகுதியில் இருந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.
இந்த சம்பவத்தில் சுதிர் உடலில் 2 குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சுதிர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து சுதிரை நோக்கி சுட்டவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அத்துடன் அவரிடம் இருந்து ஆயுதத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்யதனர். குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக பேசியதாக ஏற்கெனவே சுதிர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில் தற்போது அவர் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.