காங்கிரஸ் கட்சியில் பணம் கொடுத்தால்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்று குஜராத் முன்னாள் எம்எல்ஏ காமினிபா ரத்தோட் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போட்டியிடுகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான காமினிபா ரத்தோட் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
காந்தி நகரில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த காமினிபா செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸில் பணம் கொடுத்தால்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்றும், இதனால் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன்சிங் ரத்வா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பகவான் பரத் ஆகியோர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.