மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்ர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி காலணி அணிந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதை காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது.
2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி தாஜ் ஓட்டல், சத்ரபஜி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதையும் படிக்க: ஆதாரை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாமா?
மும்பை தாக்குதல் தினத்தையொட்டி மகாராஷ்டிர அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் என பலர் தாஜ் ஹோட்டல் முன்புள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், ஆளுநர் காலணி அணிந்து கொண்டு நினைவு தினத்தில் மலர் அஞ்சலி செலுத்தியது குறித்து காங்கிரஸ் தாக்கிப் பேசியுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சவந்த் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மரியாதை செலுத்தும்போது காலணியை கழற்றிவிட்டு மரியாதை செலுத்துவது இந்திய கலாசாரம் மற்றும் மகாராஷ்டிரத்தின் மிக முக்கிய கலாசாரம். ஆனால், ஆளுநர் தொடர்ந்து மகாராஷ்டிரத்தினையும், அதன் கலாசாரத்தையும் அவமதித்து வருகிறார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் மரியாதை செலுத்துவதற்கு முன்பு அவரிடம் காலணியினை கழற்றிவிட்டு மரியாதை செலுத்துமாறு கூறியிருக்க வேண்டும். தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை அவமதிக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.