தில்லி அரசின் பட்டாசு தடை உத்தரவைக் கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை தில்லி அரசு முழுத் தடை விதித்து செப்டம்பரில் உத்தரவிட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தீபாவளியை ஒட்டி இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆன்லைன் பட்டாசு விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தில்லியில் தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தால், 6 மாதம் வரை சிறைத் தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் அண்மையில் தெரிவித்தார்.
இந்தத் தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தில்லி அரசின் பட்டாசுத் தடை உத்தரவைக் கண்டித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்கு வெளியே பாஜக தலைவர் தஜிந்தர் பால் சிங் பக்கா தலைமையில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தில்லி முதல்வர் இந்துக்களின் பண்டிகைகளை தொடர்ந்து குறிவைத்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் தில்லி அரசு பசுமை பட்டாசுகளையாவது அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.